முதலாளியை ஏமாற்றிய கழுதை (Muthalaliyai Emarriya Kaluthai) - தமிழ் சிறுகதைகள் (Tamil Sirukathaigal)
பண்ணையபுரம் என்னும் சிற்றூரில் கிருஷ்ணன் என்ற வியாபாரி ஒருவன் வாழ்ந்து வந்தான் அவன் உப்பு தினந்தோறும் ஒரு கழுதையின் மீது உப்பு மூட்டைகளை ஏற்றி வெளியூரில் உள்ள சந்தைக்கு போய் வியாபாரம் செய்து வருவான். போகும் வழியில் ஒரு ஆறு இருந்தது. அந்த ஆற்றைக் கடந்துதான் அவன் சந்தைக்கு போக வேண்டும்.
ஒரு நாள் கிருஷ்ணன்வழக்கம் போல கழுதையின் முதுகில் உப்பு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு வியாபாரத்திற்கு கிளம்பிச் சென்றான். வழியில் உள்ள ஆற்றை கழுதை கடந்த போது எதிர்பாராமல் கழுதையின் கால்கள் வழுக்கிவிட்டது. எனவே, கழுதை தடுமாறி ஆற்றுக்குள் விழுந்து விட்டது.
கழுதை தவறி விழுந்ததால் அதன் முதுகில் இருந்த உப்பு மூட்டை நனைந்து, கரைந்து விட்டது. கழுதையை வியாபாரி மெல்ல தூக்கிவிட்டான். ஆனால், நீரில் மூழ்கியதால் உப்பு மூட்டை நனைந்தது அல்லவா அது ஒரு சில நிமிடத்தில் அப்படியே, தண்ணீரில் கரைந்து பாதி மூட்டையாகிவிட்டது.
எனவே, கழுதை முதுகில் இருந்த உப்பு மூட்டை வெறும் சாக்குப் போல எடையில்லாதபடி ஆகிவிட்டது. ஆஹா! என்ன ஆச்சரியம் இப்போது கழுதை முதுகில் சுமையே தெரியவில்லை.
கழுதைக்கு மிகுந்த சந்தோஷம். ஆனால் வியாபாரிக்கு பெரிய நஷ்டம். உப்பு வியாபாரி உப்பு வியாபாரம் செய்ய வழியில்லாமல் திரும்பினான் கழுதையை ஓட்டிக் கொண்டு வீட்டிற்கு திரும்பினான்.
மறுநாளும் வழக்கம் போல வியாபாரி உப்பு வியாபாரத்திற்கு கிளம்பினான். கழுதை முதுகில் இருந்த உப்பு மூட்டை கழுதைக்கு சுமையாக இருந்தது. கழுதை மெல்ல நடந்து ஆற்றுப் பாலம் வந்தது. திடீரென அதற்கு முந்தைய நாள் நினைவு வந்தது. எனவே, மெல்ல தடுமாறுவது போல செய்து சட்டென்று ஆற்றுக்குள் விழுந்தது.
அடுத்த நிமிடம் கழுதை முதுகில் இருந்த உப்பு மூட்டை , நீரில் கரைந்து விட்டது. இன்றும் கழுதைக்கு முதுகில் சுமை இல்லாது போய்விட்டது.
கழுதை தனது தந்திரத்தால் தொடர்ந்து இதையே செய்து வந்தது. இதனால் தினமும் வியாபாரத்திற்கு போக முடியாமல் வியாபாரி தொடர்ந்து நஷ்டம் அடைந்தான்.
ஒரு நாள் வியாபாரி வழக்கம் போல் கழுதையின் முதுகில் உப்பு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு வியாபாரத்திற்கு கிளம்பிச் சென்றான். செல்லும் வழியில் கழுதை கொண்டுவருகின்ற உப்பு எப்படி காணாமல் போகின்றன என்று யோசித்துக்கொண்டே கழுதையின் நடவடிக்கைகளை கவனித்தான்.
கழுதை வேண்டுமென்றே ஆற்றுக்குள் விழுந்தது. அவனுக்கு மெல்ல மெல்ல கழுதையின் தந்திரம் புரிந்தது. எனவே, அதற்கு ஒரு நல்ல பாடம் கற்பிக்க நினைத்தான்.
அன்று கழுதை முதுகில் வழக்கம் போல உப்பு மூட்டையை ஏற்றவில்லை. மாறாக, பஞ்சு நிறைந்த ஒரு சாக்கு மூட்டையை கழுதை முதுகில் ஏற்றினான். கழுதை வழக்கம் போல ஆற்று பாலத்தின் அருகே வந்தது. எதிர்பாராமல் கால் தடுமாறுவது போல தடுமாறி ஆற்றிற்குள் விழுந்தது.
மூட்டையில் இருந்த பஞ்சு நீரில் நனைந்தது. அடக் கஷ்டமே! கழுதையின் முதுகில் இருந்த பஞ்சு மூட்டை முன்பைவிட அதிகமாக கனத்தது. கழுதை மிகவும் கஷ்டப்பட்டு ஆற்றைக் கடந்து கரைக்கு வந்து சேர்ந்தது.
தனது ஏமாற்று வேலை இவ்வளவு நாள் தன்னைக் காப்பாற்றிவந்த வியாபாரிக்குத் தெரிந்து விட்டதை எண்ணி வெட்கப்பட்டது. இனி நேர்மையாக நடக்க முடிவெடுத்தது அந்த கழுதை.
Leave Comments
Post a Comment