ஓட்டை பானை (Ottai Paanai) - தமிழ் சிறுகதைகள் (Tamil Sirukathaigal)
டோலக்பூர் என்ற ஒரு அழகிய கிராமத்தில் ஏழை விவசாயி ஒருவன் வாழ்ந்து வந்தான்.
அவன் தினமும், தன் வீட்டுத்தேவைக்காக குளத்தில் எடுத்து வருவதை வழக்கமாக கொண்டிருந்தான்.
குளத்தில் இருந்து தண்ணீர் எடுத்து வர அவன் இரண்டு பானைகளை வைத்திருந்தான். அந்தப் பானைகளை ஒரு நீளமான கழியின் இரண்டு முனைகளிலும் தொங்க விட்டு கழியைத் தோளில் சுமந்து செல்வான்.
இரண்டு பானைகளில் ஒன்றில் ஒரு சிறிய ஓட்டை இருந்தது. அதனால் ஒவ்வொரு நாளும் வீட்டிற்கு வரும் பொழுது, குறையுள்ள பானையில் பாதியளவு நீரே இருக்கும்.
குறையில்லாத பானைக்குத் தன் திறன் பற்றி பெருமை. குறையுள்ள பானையைப் பார்த்து எப்பொழுது அதன் குறையைக் கேலியும் கிண்டலும் செய்து கொண்டே இருக்கும்.
இப்படி இரண்டு வருடங்கள் கழிந்து விட்டன. கேலி பொருக்க முடியாத அந்த ஓட்டை பானை அதன் எஜமானைப் பார்த்துப் பின் வருமாறு கேட்டது.
ஐயா! என் குறையை நினைத்து நான் மிகவும் கேவலமாக உணர்கிறேன். உங்களுக்கும் தினமும் என் குறையால், வரும் வழியெல்லாம் தண்ணீர் சிந்தி, உங்கள் வேலைப் பளு மிகவும் அதிகரிக்கிறது. என் குறையை நீங்கள் தயவு கூர்ந்து சரி செய்யுங்களேன்"
அதற்கு விவசாயி, "பானையே! நீ ஒன்று கவனித்தாயா நாம் வரும் பாதையில், உன் பக்கம் இருக்கும் அழகான பூச்செடிகள் வரிசையைக் கவனித்தாயா உன்னிடமிருந்து தண்ணீர் சிந்துவது எனக்கு முன்பே தெரியும். அதனால்தான் வழி நெடுக பூச்செடி விதைகளை விதைத்து வைத்தேன்.
அவை நீ தினமும் சிந்திய தண்ணீரில் இன்று பெரிதாக வளர்ந்து எனக்கு தினமும் அழகான பூக்களை அளிக்கின்றன அவற்றை வைத்து நான் வீட்டை அலங்கரிக்கிறேன். மீதமுள்ள பூக்களை விற்று நான் பணம் சம்பாதிக்கிறேன்.
இதைக் கேட்ட பானை தன்னை கேவலமாக நினைப்பதை நிறுத்தி விட்டது. அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப்படாமல் தன் வேலையைக் கருத்துடன் செய்யத் தொடங்கியது.
Leave Comments
Post a Comment