சிலந்தி கற்பித்த பாடம் (Silanthi) - தமிழ் சிறுகதைகள் (Sirukathaigal in Tamil)
ஒரு போரில் தோல்வி அடைந்த அரசன் ஒருவன். தன் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக மறைவான இடம் தேடி ஓடி ஒளிந்தான்.
அரசன் மிகவும் வீரத்துடன் போரிட்டாலும் அவனின் படை மிகவும் சிறியதாக இருந்ததால் அவனால் வெல்ல முடியவில்லை. எதிரியிடம் மாபெரும் படை இருந்ததால் வெற்றி பெற்றனர்.
தோல்வியுற்ற அரசனை கொலை செய்யுமாறு அவனை வென்ற அரசன் தன் படை வீரர்களுக்கு உத்தரவு பிறப்பித்தான்.
இதனை அறிந்த அரசன் காட்டிற்கு ஓடிச் சென்று அங்கு இருந்த ஒரு குகையில் ஒளிந்து கொண்டான்.
தோல்வி கண்ட அரசன் மிகவும் மனவருத்தம் கொண்டான். மனச்சோர்வினால் துணிவை இழந்தான். ஒருநாள் சோம்பலுடன் அரசன் குகையில் படுத்திருந்தான் அந்தக் குகையினுள் ஒரு சிலந்தி வாழ்ந்து வந்தது.
அந்த சிறிய சிலந்தியின் செயல் அரசனின் கவனத்தைக் கவர்ந்தது. குகையின் ஒரு பகுதியில் ஒரு வலையைப் பின்னக் கடுமையாக முயற்சி செய்து கொண்டிருந்தது. சுவரின் மீது ஊர்ந்து செல்லும் போது வலையினில் பின்னிய நூல் அறுந்து சிலந்தி கீழே விழுந்து விட்டது.
இவ்வாறு பலமுறை நடந்தது. ஆனாலும், சிலந்தி தனது முயற்சியைக் கைவிடாமல் மறுபடியும் மறுபடியும் முயன்றது கடைசியில் வெற்றிகரமாக வலையைப் பின்னி முடித்தது.
அரசன் 'இச்சிறு சிலந்தியே பல முறை தோல்வியடைந்தும் தன் முயற்சியைக் கைவிடவில்லை. நான் ஏன் விடவேண்டும்?
நானோ அரசன். நான் மறுபடியும் முயற்சி செய்ய வேண்டும்" என்று எண்ணினான் மறுபடியும் தன் எதிரியுடன் போர் புரிய தீர்மானித்தான்.
அரசன் தான் வசித்த காட்டிற்கு வெளியே சென்று தன் நம்பிக்கையான ஆட்களைச் சந்தித்தான்.
தன் நாட்டில் உள்ள வீரர்களை எல்லாம் ஒன்று சேர்த்து பலம் மிகுந்த ஒரு படையை உருவாக்கினான், தன் எதிரிகளுடன் தீவிரமாகப் போர் புரிந்தான். கடைசியில் போரில் வெற்றியும் பெற்றான், அதனால் தன் அரசைத் திரும்பப் பெற்றான்.
தனக்கு அறிவுரை போதித்த அந்த சிலந்தியை அவன் மறக்காமல், அந்த சிலந்தியின் முயற்சியை விவரிக்கும் விதமாக ஒரு ஓவிய கல்வெட்டை அரண்மனையில் நிறுவினான்.
Leave Comments
Post a Comment